குஜராத் மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அங்கு 157 பள்ளிகளில் ஒரு மாணவர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகின. மொத்தம் 7.34 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், இதில் 4.74 லட்சம் மாணவர்கள் தான் முழுமையாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் 64.62 விழுக்காடாக உள்ளது. கடந்தாண்டு தேர்ச்சி சதவீதம் 65.18 ஆக இருந்த நிலையில், தற்போது அது மெல்லிய அளவில் குறைந்துள்ளது.
அம்மாநிலத்திலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். புள்ளி விவரப்படி மாணவிகள் 70.62 விழுக்காடும், மாணவர்கள் 59.58 விழுக்காடும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் அதிகபட்சமாக சூரத்தில் 76% மாணவர்கள் தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது. பழங்குடி மக்கள் அதிகம் இருக்கும் தஹோத் மாவட்டம் 40.75 சதவீத தேர்ச்சியுடன் கடைசி இடத்தில் உள்ளது. மொத்தம் 272 பள்ளிகள் 100% தேர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்தாண்டு தோல்வியடைந்து மறுத்தேர்வு எழுதிய 1,65,690 மாணவர்களில் வெறும் 27,446 பேர் தான் தற்போது தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் அதிர்ச்சி தரும் அம்சம் என்னவென்றால் 157 பள்ளிகளில் தேர்வு எழுதிய ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது தான். ஆங்கில வழி பள்ளிகளில் தான் அதிகபட்சமாக 88.11 சதவீத தேர்ச்சி பதிவாகியுள்ளது. இந்தி வழி கல்வி நிலையங்களில் 72.66 சதவீதமும், குஜராத்தி வழி பள்ளிகளில் 64.58 சதவீத தேர்ச்சி விகிதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என புள்ளி விவரம் தெரிவிக்கிறது.