அதிகாரிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாக சாடிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டிபுரம் அருகே கீரன்குளம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் குளத்தின் கரையை சரிசெய்து நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், சீரமைப்பு பணிகளை தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் மனோதங்கராஜ் இந்த கிராமத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது குளத்தை பார்வையிட்ட அவர், அதன் கரைகளை உடைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல வருடங்களாக மிகவும் கெட்டியாக இருக்கும் கரையை உடைத்தால் அதன் உறுதி தன்மை போய் விடும்.. மழை நேரங்களில் தண்ணீர் ஊருக்குள் அல்லது சாலையில் வந்து விடும்.. ஒரு மோட்டாரை வைத்து தண்ணீரை வெளியேற்றி இருக்கலாமே என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
அமைச்சரின் இந்த கேள்விக்கு அதிகாரிகள் அளித்த பதில் திருப்தி அளிக்காததால், ஆவேசமாக திட்டிய அமைச்சர், பேரூராட்சி செயல் அலுவலரை அழைத்து பேசினார். அவர் அளித்த பதிலும் திருப்தி அளிக்காத நிலையில், அமைச்சரிடம் பேசுவதை தெளிவாக பேச வேண்டும் என்று மிகவும் கடிந்து கொண்டார். இதையடுத்து தொடர்ந்து அதிகாரிகளிடம் ஆவேசமாக பேசிய அமைச்சர், கீரங்குளம் அமைந்திருப்பது ஒரு சிறிய கிராமம். கிராமத்தில் பல வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டி உள்ள நிலையில், இது தேவை இல்லாத ஒரு வேலை, இதென்ன சிட்டி – யா நடைபாதை அமைக்க? கிராம மக்கள் நடந்து போக இடம் இல்லையா? இந்த பணத்தை பயன்படுத்தி வேறு ஏதாவது வளர்ச்சி பணிகள் செய்திருக்கலாமே என்று கடுமையாக சாடினார்.
பெரும் நகரங்களில் இருப்பதை போன்று கிராமத்தில் இவ்வாறு அமைக்க வேண்டிய அவசியம் என்ன? பெரும் நகரங்கள் மற்றும் நகரங்களில் இருப்பவர்கள் விரும்புவது போன்று கிராம மக்கள் இதனை விரும்ப மாட்டார்கள். குளம் அதன் வடிவமைப்பிலேயே இருந்தால் தான் நன்றாக இருக்கும. கிராமத்தில் வசிக்கும் மக்களும் அதைத்தான் விரும்புவார்கள். ஏற்கனவே குளம் எப்படி இருந்ததோ அதுபோலவே மறு சீரமைப்பு செய்யுங்கள். மீண்டும் குளத்திற்கு வருகை தருவேன். குளத்தின் அளவு ஒரு இன்ச் கூட குறைய கூடாது என்று அதிகாரிகளை எச்சரிக்கை செய்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.