நம் வீட்டில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டரை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பார்த் பெட்ரோலியம், இந்துஸ்தான், இண்டேன் போன்ற நிறுவனங்கள் விநியோகிக்கின்றன. வீடுகளுக்கு 14.50 கிலோ எடையிலும்; வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ, 47.50 கிலோ, 425 கிலோ எடையிலும் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. சிலிண்டர்கள் போனில் முன்பதிவு செய்தால் அடுத்த சில நாட்களில் வீடுகளுக்கே வந்து விநியோகிக்கப்படுகிறது. இதுவரை சமையல் கேஸ் விநியோகிக்கும் நிறுவனங்கள் சிலிண்டர் மற்றும் கேஸ் அடுப்பு அதற்கு தேவையான ஸ்பேர்களை மட்டுமே விற்பனை செய்து வந்தது.
ஆனால், இனி மளிகைப் பொருட்களையும் உங்கள் கேஸ் ஏஜென்சிகளிடம் வாங்க முடியும். இதன் மூலம் வீடுகளுக்கே மளிகைப் பொருட்கள் விநியோகம் வரப்போகிறது. இத்திட்டத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தொடங்கி உள்ளது. இந்நிறுவனம் சமையல் கேஸ் விற்பனையை தாண்டி, வணிகம் வாயிலாக வருவாயை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், குளிர்பானம், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களையும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் முதற்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் தலா ஒரு ஏஜென்சி என மொத்தம் 3 ஏஜன்சிகளில் மளிகை உள்ளிட்ட பொருட்களின் விற்பனை ஆரம்பம் ஆகியுள்ளது. இது படிப்படியாக விரிவுபடுத்த இந்தியன் ஆயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய வணிகத்தை ஏஜன்சிகள் ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை. விருப்பமுள்ளவர்கள் செய்து கொள்ளலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மளிகைப் பொருட்களையும் பொதுமக்கள் பெற முடியும். அதேநேரம் விலைகுறைவாக இருந்தால் வரவேற்பு அதிகமாக வாய்ப்பு உள்ளது.