மின் கட்டண சலுகை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மின் நுகர்வோருக்கு முதல் 100 யூனிட்கள் இலவசம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. சலுகைகளை பெற விரும்பும் தகுதியான நபர் ஆதார் எண்ணை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, அரசின் பல்வேறு திட்டங்களின் சலுகைகளைப் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஆதார் எண் இல்லாதவர்கள் தங்களுக்கான எண் ஒதுக்கப்படும் வரை, வேறு ஆவணங்களை அளிக்கலாம் எனவும் ஆதார் பதிவு சீட்டு, ஆதார் எண்ணுக்காக விண்ணப்பித்த நகல் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படத்துடன் கூடிய வங்கி புத்தகம் அல்லது தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, நிரந்தர கணக்கு எண், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், அடையாளச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களையும் அளிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பயனாளிகள் தடங்கலின்றி பலன்களைப் பெறுவதற்காக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) ஆதார் தேவைகள் குறித்து பயனாளிகளுக்குத் தெரியப்படுத்துவதற்காக விளம்பரம் செய்யவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின் கட்டணம் செலுத்தும்போது ஆதார் எண்ணை அளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.