கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து தற்போது இன்புளுயன்சா காய்ச்சல் மக்களை அச்சுறுத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இன்புளுயன்சா வைரஸ் பரவி வரும் நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் காய்ச்சல் 4 நாட்கள் வரை பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை வெளிநோயாளிகள் மற்றும் காய்ச்சல் பிரிவில் பரிசோதனை மேற்கொள்ள பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக, சாதாரண நாட்களில் 250 பேர் வரை காய்ச்சல் மற்றும் சளி உள்ளிட்ட பிரச்சனைகளால் சிகிச்சை எடுத்துக்கொள்ள வரும் நிலையில், கடந்த சில நாட்களாக 300-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் காய்ச்சல் காரணமாக சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு வந்து செல்கின்றனர். சுமார் 50ல் இருந்து 70 பேர் கூடுதலாக சிகிச்சைக்கு வருவதாகவும், நெஞ்சு அடைப்பு, மூச்சு விடுதலில் கடும் சிரமம் உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தால் மட்டுமே இன்புளுன்யசா பரிசோதனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.