சென்னையில் நைட் டியூட்டி வந்த நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் மருத்துவமனை உரிமையாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் பேரா என்ற தனியார் மெடிக்கல் அகாடமியில் நர்சிங் டிப்ளமோ படித்து வருகிறார். அகாடமி பரிந்துரையின் பேரில் நர்சிங் மாணவி நைட் டியூட்டி பயிற்சியாக அயனாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி இரவு 10 மணியளவில் மாணவி அந்த தனியார் மருத்துவமனைக்கு பணியாற்றச் சென்றுள்ளார்.

அப்போது, மருத்துவமனையின் உரிமையாளரும் தலைமை மருத்துவருமான விவேகானந்தன் மாணவியை தனி அறைக்கு அழைத்து குடும்ப விவரங்கள் குறித்து விசாரித்துள்ளார். பின்னர் உன்னையும், உனது குடும்பத்தையும் இனி நான் பார்த்துக் கொள்கிறேன். மருத்துவமனையிலேயே உயர்ந்த சம்பளத்தில் வேலைக்கு சேர்த்துக் கொள்கிறேன் எனக்கூறி மாணவியின் கையைப் பிடித்து தவறாக நடக்க முயன்றள்ளார். இதனால், பதறிப்போன மாணவி கையை உதறி தள்ளிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார். இதேபோல், அடிக்கடி பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், பொறுமை இழந்த மாணவி அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.