இணையத்தில் தகவல் திருட்டு என்பது வெகு சாதாரணமானது. ஹேக்கர்களின் திருவிளையாடல் அவர்கள் சார்பிலான வைரஸ்கள் ஆகியவை மட்டுமன்றி, நாம் வெகுவாய் நம்பியிருக்கும் இணைய உலாவிகள் முதல் சமூக ஊடகங்கள் வரை இந்த தகவல் திருட்டு பரவலாக நடக்கின்றன. நமது தனிப்பட்ட தகவல்களைத் திருடி விளம்பரதாரர்களுக்கு விற்பதிலும், அதற்காக நமது தேடல்கள் மற்றும் விருப்பங்களை உளவு பார்ப்பதிலும் ஈடுபடுகின்றன.
அவ்வாறான ’லூவாட்ரீம்’ என்ற மால்வேர் குறித்து மத்திய அரசின் ’இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம்’ முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த லூவாட்ரீம் மால்வேர் நமது ஓஎஸ் இயங்குதளத்தின் தகவல்கள் முதல் ஐபி முகவரி வரை அனைத்தையும் திருடும். குறிப்பாக, அலுவலக நெட்வொர்க் அட்மினாக இருப்பின் அவரது தகவல்களை குறிவைத்து திருடும். இவ்வாறு திருடிய தகவல்களைக் கொண்டு, ஆபத்தை விளைவிக்கும் இதர வைரஸ்களை வரவேற்கும் வகையில் பின்வாசலை திறந்து வைக்கும். இதற்காக ஹேக்கர்களின் கைங்கரியமாகவும் இந்த லூவாட்ரீம் மால்வேர்கள் இணையத்தில் பரப்பப்பட்டு வருகின்றன.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த லூவாட்ரீம் மால்வேர் தாக்குதலால் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளன. அநாவசிய இணையதளங்களை பார்ப்பது, கவர்ச்சிகரமான இணைப்புகள் மற்றும் மெயிலுக்கு வரும் போலியான இணைப்புகள் ஆகியவற்றை கிளிக் செய்வது போன்றவை ஆபத்தை விளைவிக்கக்கூடும். பொதுஇடத்தில் கிடைக்கும் வைஃபை இணைப்பை பயன்படுத்துவதில் அஜாக்கிரதையும், மால்வேர்கள் ஊடுருவலுக்கு வழிவகுக்கும். தரமான ஆன்டிவைரஸ் மென்பொருள் பாதுகாப்பை நிறுவுவதுடன் அவ்வப்போது அதனை அப்டேட் செய்து வைத்திருப்பதும் அபாயங்களில் இருந்து நம்மை காக்கும்.