குஜராத் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்துவோம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்தாண்டு இறுதியில் குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் ஆளும் பாஜக-வை எதிர்த்து ஆம் ஆத்மி, காங்கிரஸ் நேரடியாக போட்டியிடுகிறது. டெல்லியை அடுத்து பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி, பிற மாநிலங்களிலும் கால் பதிக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், குஜராத் மாநிலத்தில் பல கட்டங்களாக பிரசாரத்தை மேற்கொண்டு வரும் கெஜ்ரிவால், வதோதராவில் இன்று பேசுகையில், ”குஜராத்தில் பல தினங்களாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்தக் கோரி அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது கோரிக்கை பூர்த்தி செய்யப்படும். பஞ்சாபில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று குஜராத்தில் ஆட்சியமைத்த சில தினங்களிலேயே அமல்படுத்துவோம்.

நாங்கள் பணவீக்கத்தை ஒழித்து மருத்துவமனைகள், பள்ளிகள் கட்டுவோம் எனவும் மின்சாரத்தை குறைந்த விலையில் கொடுப்போம் எனவும் வாக்குறுதி அளிக்கிறோம். பாஜக-வின் மீது பரிதாபப்படுகிறேன். பாஜக-வை போல் உபயோகமில்லாத கட்சியை ஒரு போதும் நான் பார்த்ததில்லை. இக்கட்சிகள் 75 வருடங்களில் செய்யாததை பகவந்த்மான் வெறும் 6 மாதங்களில் செய்திருக்கிறார்” என்றார். முன்னதாக, குஜராத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட கெஜ்ரிவால் வேளாண் கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்துள்ளார்.