Omni Bus | தமிழ்நாட்டில் திருவிழா காலங்கள், நீண்ட விடுமுறை வரும் நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணமே இருக்கும். தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்தும் சில பேருந்துகள் கட்டணத்தை குறைக்கவே மாட்டார்கள்.
இந்நிலையில், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கக் கூடிய தனியார் பேருந்துகளுக்கு அபராத விதித்தால் மட்டுமே தீர்வு கிடைக்காது என்றும் பேருந்து உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சோதனையை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அபராத தொகையை 50,000 ரூபாயாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.