கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூரில் வன்முறையால் சேதமடைந்த தனியார் பள்ளியை திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஷர்வன் குமார் ஜடாவத், எஸ்.பி. பகலவன் ஆகியோருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “மாணவி உயிரிழப்பை தொடர்ந்து கலவரத்தில் சூறையாடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை முதல் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என அறிவித்தார்.
கலவரம் காரணமாக பள்ளி சேதமடைந்து மாணவர்கள் கல்வியை தொடர முடியாத சூழலில், ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், பெற்றோர் – ஆசிரியர் கழகத்தின் சார்பில் கருத்துக்கள் கேட்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை தயார் செய்து அடுத்த வாரம் முதல் வகுப்பு தொடங்கப்படும் என்றும் கனியாமூர் பள்ளி மாணவர்களை அருகாமையில் உள்ள பள்ளிகளில் படிக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.