காவிரி நீர் தொடர்பாக கர்நாடகா-தமிழ்நாடு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி நீரை திறக்கும்படி கர்நாடகாவுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதை ஏற்க கர்நாடகம் மறுத்துவிட்டது.
இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்தும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். அதன்படி, காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து கர்நாடகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. மண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும், மண்டியாவில் முழு அடைப்பு நடைபெற்றது. மண்டியா மட்டுமின்றி பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளிலும் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், சில கன்னட அமைப்புகள் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளதை கண்டித்து தலைநகர் பெங்களூருவில் நாளை (செப்.26) முழு அடைப்பு நடைபெறும் என்று அறிவித்துள்ளன. இதற்கு பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.