திருச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும்படி சசிகலா, தினகரன் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் அதிமுகவின் 51ஆம் ஆண்டு விழா ஆகியவை முப்பெரும் விழாவாக ஓபிஎஸ் தரப்பினர் சார்பில் கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநாடு குறித்து நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ”ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெறும் மாநாடு, கழகத்தின் சட்ட விதியை அபகரித்த சர்வாதிகார கும்பலை நீக்கும் மாநாடாக அமையும். சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
அதிமுக தொண்டர்களுக்கு எம்ஜிஆர் அளித்த உரிமையை மீட்டெடுக்க தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்துவோம். எம்ஜிஆர் காலம் முதல் ஜெயலலிதா காலம் வரை அதிமுகவில் பணியாற்றிய அனைவரையும் ஒன்றிணைத்து இந்த இயக்கத்தை மீண்டும் நடத்துவோம். தொண்டர்கள் நினைத்தால் மீண்டும் இந்த இயக்கத்தில் அனைவரையும் ஒன்றிணைக்க முடியும். கர்நாடகா தேர்தலில் போட்டியிடுவதற்காக இரட்டை இலை சின்னத்தை எங்கள் தரப்பு கேட்டுப் பெறும். பாஜக தேசிய கட்சியாக இருக்கிறது. அவர்கள் எண்ணத்தின்படி செயல்படுகிறார்கள். எடப்பாடி அணிக்கு பாஜகவினர் ஆதரவு தெரிவிப்பதாக இருப்பது தோற்றம் தானே தவிர உண்மை அல்ல. ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியவுடன், ஆன்லைன் ரம்மிக்கு எதிரான சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது நல்லது” என்று தெரிவித்தார்.