திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (47). இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் அருகே 3 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக் கொண்டிருந்த நிலையில், இதனை செந்தில் குமார் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அந்த கும்பல், செந்தில் குமாரை வெட்டிக் கொன்றது. இதனை தடுக்க வந்த அவருடைய தம்பி மோகன்ராஜையும், அவருடைய தாய் புஷ்பவதி, சித்தி ரத்தினாம்பாள் ஆகியோரையும் அந்த கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
இந்த கொலை வழக்கில் தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொலைக்கு டாஸ்மாக்தான் காரணம் என்பதால் அக்கடைகளை மூடுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், விசாரணையில் இது முன்விரோதத்தால் நடந்த கொலை என சொல்லப்படுகிறது. அதாவது, செந்தில்குமாரிடம் தூத்துக்குடியை வெங்கடேஷ் (34) என்பவர் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணம் பிரச்சனை தொடர்பாக செந்தில்குமார், வெங்கடேஷை வேலையை விட்டு நீக்கியுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், வெங்கடேஷ் மற்றும் சிலர் செந்தில்குமார் இடத்தில் மது அருந்தி பிரச்சனை செய்துள்ளனர். அப்போது 4 பேரையும் கொடூரமாக கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.
இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளிப்பதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல், ஏற்கெனவே ஒருவர் கைதான நிலையில் தற்போது மற்றவர்களையும் விரைந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன்படி, முக்கிய குற்றவாளியான வெங்கடேசனை பிடிக்க தனிப்படை போலீசார் நெல்லை சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தொடர்பான இடங்கள், உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெங்கடேசனின் செல்போன் கடைசியாக நெல்லையில் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. அந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் அவர் குறித்த காட்சிகள் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை அடையாளம் காண அழைத்துச் சென்றபோது தப்பியோட முயற்சித்தார். அப்போது தவறி விழுந்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்லடம் கொலை வழக்கில் மேலும், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. சோனை முத்தையா என்பவரை போலீஸார் பிடித்து விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.