சென்னை சின்ன மாத்தூர் பெருமாள் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி நந்தினி. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், பாலாஜி நேற்று வழக்கம் போல் காலை 6 மணிக்கு வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் இரண்டு குழந்தைகளும் தனியாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் இல்லாத நேரத்தில் 2-வது குழந்தை லட்சுமி, ஸ்விட்ச் போர்டில் இருந்த கொசு மருந்தை எடுத்து வாயில் வைத்துள்ளது.
பின்னர், சிறிது நேரத்திலேயே குழந்தை மயங்கிய நிலையில், வாயிலிருந்து நுரை வந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் நந்தினி, குழந்தையை அழைத்துக் கொண்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அங்கு நேற்று மதியம் முதல் மாலை வரை குழந்தைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், நேற்று மாலை குழந்தை லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இது தொடர்பாக எம்.எம். காலனி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவறாக கொசு மருந்தை குடித்து இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.