மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாத்தங்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் முனீஸ்வரன்-முத்துமாரி தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் முத்துமாரி தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார். முத்துமாரியின் மூத்த மகள் ஷீலா (14) சாத்தங்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், சம்பவத்தன்று முத்துமாரி அவரது தாயாருடன் வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஷீலா தொட்டிலில் ஊஞ்சல் ஆடியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது கழுத்தில் சேலை முறுக்கிக் கொண்டது. இதில் அவர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
மாலையில் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த முத்துமாரி மற்றும் அவரது தாயார் தனது மகள் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதுகுறித்து அங்கிருந்தவர்கள் திருமங்கலம் தாலுகா போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக முத்துமாரி அளித்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த சிறுமி, எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.