கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன், “சனாதனம் என்ற ஒரு வார்த்தை சொன்னதற்காக ஒரு சின்னப்பிள்ளையை அடியோ அடி என அடிக்கிறார்கள். அது அவரது தாத்தாவிற்கு தாத்தா சொன்ன விஷயம். எங்களுக்கு அந்த வார்த்தையை சொன்னவர் பெரியார்.
நாடாளுமன்ற தேர்தலை ஒன்றிய அரசு சீக்கிரம் கொண்டு வருவார்கள். கடந்த தேர்தலில் ஜெயித்திருந்தால் எம்எல்ஏ. இல்லையென்ற போதும் நெஞ்சை நிமிர்த்தி நடந்தேன். என் முகத்தில் அப்போது சோகம் இல்லை. அத்தனை மக்கள் வாக்களித்தும் நம்மை ஏமாற்றியது யார்? மீண்டும் நாம் சூழ்ச்சிக்கு ஆளாக கூடாது. மநீமவை பொறுத்தவரை எனக்கு வெவ்வேறு இடங்களில் இருந்து அழைப்புகள் வருகிறது. தேர்தலில் நிற்க கோவைக்கு வாருங்கள். நாம் பழிக்கு பழி வாங்க வேண்டும் என தொண்டர்கள் சொல்கிறார்கள்.
இந்த வயதில் அரசியலுக்கு வந்ததற்கு நான் மன்னிப்பு தான் கேட்க வேண்டும். கலைஞர் என்னை திமுகவிற்கு வருமாறு அழைத்தார். அப்போது நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரப்போகிறேன் என சொல்லியிருக்க வேண்டும். அப்பா காங்கிரசில் இருப்பதால் காங்கிரசில் சேர்கிறேன் என சொல்லியிருக்க வேண்டும். அப்போதே அரசியலில் இறங்கி இருக்க வேண்டும். ஒவ்வொரு பூத்திலும் 20 பேர் என் அப்பா போல இருக்க வேண்டும்.
கோவைக்கு வாங்க என கூப்பிடுவது மட்டும் போதாது. வேலை செய்ய 40 ஆயிரம் பேர் ரெடி பண்ண வேண்டும். விக்ரமுக்கு கூட்டம் சேர்ந்தது. மநீமவிற்கு கூட்டம் சேரவில்லை என்று சொல்வதை நம்ப முடியுமா? உங்களால் இயன்றதை செய்யுங்கள் என்று தான் சொல்கிறேன். தலைவனால் இயலாததை தொண்டனிடம் சொல்லக் கூடாது. எனக்கு மூக்கு உடைத்தாலும் பரவாயில்லை. மருந்து போட்டு வந்து மீண்டும் கோவையில் நிற்பேன்.
தேர்தலில் 40 இடங்களிலும் நீங்கள் வேலை செய்ய தயாராக வேண்டும். நல்ல தலைமை தமிழ்நாடு முழுவதற்கும் வர வேண்டும். நமது அஜாக்கிரதையினால் நாம் பழியாகி விடக் கூடாது. ஒருவர் தேரை இழுக்க முடியாது. அனைவரும் சேர்ந்து இழுக்க வேண்டும். நேர்மைக்கு எல்லா இடங்களிலும் மரியாதை உள்ளது. அவர்களே நம்மை அழைப்பார்கள். அழைப்பிதழ் அச்சடிக்க ஆரம்பித்து விட்டார்கள். என்னை தலைவன் என நம்புபவர்கள் இருக்கிறார்கள். கட்சிக்கு புதிதாக வருபவர்களுக்கு நீங்கள் வேலியாக இருக்கக் கூடாது. ஏணியாக இருக்க வேண்டும்.
ஒருவரே பிரதமராக இருக்க வேண்டும் என நினைப்பது சர்வதிகாரம். அதற்கு எதிராக இந்தியா வெகுண்டு பேசுகிறது ஒரே தேர்தல். ஒரே தலைமை. இந்தி ஒழிக என சொல்லவில்லை. தமிழ் வாழ்க என்று சொல்கிறோம். இந்தி பேசினால் தான் வேலை என்றால், அந்த வேலை வேண்டாம். ராஜராஜ சோழன் இந்தி தெரிந்தால் தான் வேலை தருவேன் என சொல்லவில்லை. தமிழ் தெரிந்தவர்கள் தமிழ் பேசுபவர்களுக்கு வேலை தந்தால் போதும்” என்றார்.