நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதே நேரத்தில் இந்த முறை பாஜகவை மத்தியில் வரவிடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் புதிய கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி உள்ளன.
இதேபோல், தமிழ்நாட்டிலும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விடமாட்டோம் என்றும், மத்திய மோடி ஆட்சி இதோடு முடிவுக்கு வந்துவிடும் என்று சூளுரைத்து வருகிறார். இப்படி நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெறப் போவதாக அகில இந்திய பார்வர்டு ப்ளாக் கட்சி அறிவித்துள்ளது. திமுகவிடம் உரிய தொகுதிகளை கேட்டுப் பெறுவோம் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜையில் அதிமுக, திமுக என இரு கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கும் நிலையில், முன்னதாகவே தங்களது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது அகில இந்திய பார்வர்டு ப்ளாக் கட்சி.