அமெரிக்காவை சேர்ந்த போலியோ நோயால் பாதிக்கப்பட்ட நபர், சிலிண்டர் போன்ற இரும்பு நுரையீரலுடன் 7 தசாப்தங்களுக்கு மேல் வாழ்ந்தவர் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார்.
அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் பால் அலெக்சாண்டர் தனது 6 வயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் அவரின் கழுத்துக்கு கீழ்பகுதி முழுமையாக செயலிழந்தது. இவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், இவருக்கு மூச்சுவிடுவதற்கு கடினமாக இருந்தது, பின்னர், அங்கிருந்த ஒரு மருத்துவர் அவருக்கு ‘Tracheostomy’ என்னும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். அப்பொழுது தான் அவருக்கு சிலிண்டர் வடிவிலான இரும்பு நுரையீரல் பொருத்தப்பட்டது. இவர் 18 மாதங்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார், பின்னர் ‘frog breathing’ என்ற முறையை கையாண்டார்.
இரும்பு நுரையீரலால் சுவாசித்தாலும், அலெக்சாண்டரை அவ்வப்போது இரும்பு நுரையீரலுக்குள் இருந்து விடுவித்து சாதாரணமாக சுவாசிக்க வைக்கும் முயற்சியிலும் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் நீண்ட நேரத்திற்கு அலெக்சாண்டரால் சுவாசிக்க முடியவில்லை. அலெக்சாண்டர் வாயில் இருக்கும் ஒரு குச்சி போன்ற சாதனத்தை பயன்படுத்தித் தான் 155 பக்கங்கள் கொண்ட தனது நினைவுக் குறிப்புகள் புத்தகத்தை எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தின் பெயர் Three minutes for Dog-My life in an Iron Lung. வழக்கறிஞரான பால் அலெக்சாண்டர் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலி மூலம் நீதிமன்றம் சென்று வாதாடியும் இருக்கிறார்.
திடமாக சுவாசிக்கும் திறன் கொண்ட லட்சக் கணக்கானோரை கொரோனா காவு வாங்கிய போதும், இரும்பு நுரையீரல் மூலம் சுவாசிக்கும் பால் அலெக்சாண்டார் உயிர் பிழைத்தது அதிசயம் தான் என்கிறார்கள் மருத்துவர்கள். தற்போது, 77 வயதான பால் அலெக்சாண்டர் தான் இந்த உலகில் இரும்பு நுரையீரலுடன் வாழும் கடைசி மனிதன் ஆவார். எனவே, இரும்பு நுரையீரலுடன் 7 தசாப்தங்களுக்கு மேல் வாழ்ந்த நோயாளி என்று கடந்த மார்ச் மாதம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.