ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 12 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
செய்திகளை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஓய்வுபெற்ற பின்னர், எத்தகு இயலாமைக்கும் ஆளாகாமல் இருக்க தமிழ்நாடு அரசின் சார்பில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 1986ஆம் ஆண்டில் இருந்த நலிவடைந்த பத்திரிகையாளர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. பத்திரிகையாளர்கள் 20 வருடங்கள் செய்தி ஆசிரியர், உதவி ஆசிரியர், செய்தியாளர், புகைப்பட கலைஞர் மற்றும் பிழை திருத்துனர் ஆகிய துறைகளில் பணியாற்றி இருந்தால் தகுதியின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
முக.ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பதவி ஏற்றதும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்கள் என அறிவித்தார். மேலும், பத்திரிகையாளர் நல வாரியமும் அமைத்தார். பத்திரிகையாளர்களுக்கான மாத ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத் தொகை ரூ.12,000ஆக உயர்த்தப்படுவதாக கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. ஓய்வூதியம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான கூடுதல் செலவினமாக ஒரு கோடியே 58 லட்சம் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.