கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சபரிநாத் (40). இவர் சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அண்மையில் இறந்துவிட்டதால், தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு விட்டதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். மேலும் விடுமுறை நாட்களவில் அவ்வபோது இந்த வீட்டில் வந்து தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆய்வாளர் சபரிநாத் இன்று காலை வீட்டில் இருக்கும் போது அவருக்கு சமைப்பதற்காக வீட்டில் குடியிருக்கும் சாந்தி, அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டில் இருந்து பலத்த சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தியின் உறவினர்கள் உடனடியாக கீழிருந்து மேல் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது சாந்தியும், சபரிநாத்தும் தீயில் எரிந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து, உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அங்கு விரைந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், சபரிநாத்தும், சாந்தியும் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக தீயணைப்புத் துறையினர் கூறுகையில், பிரிட்ஜ் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.