போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகளில் 35% வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 13,000-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்களின் போராட்ட அறிவிப்பை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தனியார் ஆம்னி பேருந்துகள் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் இருந்து கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உட்பட பல பகுதிகளுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. வழக்கமான கட்டணத்தை விட 20% முதல் 35% வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே, கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றன.