ஜப்பானில் 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட அணு உலை விபத்தின் தாக்கத்தை குறைப்பதற்காக பயன்படுத்திய கதிர் வீச்சு நீரை, கடலில் கலந்துவிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதனால், தென் கொரிய மக்கள் உப்பையும், மீனையும் பதுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக பூலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த புகுஷிமா அணு உலை விபத்தை யாராலும் மறக்க முடியாது. 12 ஆண்டுகளுக்கு பிறகும் அதன் தாக்கம் ஜப்பானிலும் அண்டை நாடான தென்கொரியாவில் இருப்பதாக கூறுகிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன். இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது, “பொதுவாக மக்கள் தங்கம், வைரம் போன்றவற்றை பதுக்கி வைப்பதை பற்றி கேள்விப்பட்டுள்ளோம். சில நேரங்களில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் போது உணவு பொருட்களை பதுக்கி வைத்து கேட்டுள்ளோம். ஆனால், தென் கொரிய மக்கள் உப்பை பதுக்கி வைக்கிறார்கள்.
உப்பை ஏன் பதுக்க வேண்டும் என்கிற கேள்வி எழுவது நியாயம்தான். 2011ஆம் ஆண்டு புகுஷிமாவில் ஏற்பட்ட அணுவுலை விபத்தின் தாக்கத்தை குறைக்க பல கோடி லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரில் எந்த தொழில்நுட்பத்தாலும் கழிக்க முடியாத “ட்ரிட்டியம்” உள்ளது. 12 ஆண்டுகளுக்கு மேலாக “கதிர்வீச்சு நீர்” வளாகத்தின் உள்ளையே சேமிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மேலும் தண்ணீரை வைக்க முடியாத காரணத்தால் பசிபிக் பெருங்கடலில் இந்த தண்ணீரை கலந்துவிடுவது என ஜப்பான் அரசு கொடுத்த அறிக்கையை சர்வதேச அணுசக்தி முகமையம் ஏற்றுக் கொண்டு, “கடலில் கலப்பதற்கு மட்டுமே அனுமதி தருகிறோம்… அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல” என்று சர்வதேச அணுசக்தி நிறுவனம் அறிவித்துவிட்டது.
கதிர்வீச்சு கொண்ட நீர் கடலில் கலக்கும் போது அங்கிருந்து உற்பத்தியாகும் உப்பிலும் கதிர்வீச்சு கலந்துவிடும். இதனால், உப்பையும் மீனையும் தென்கொரிய மக்கள் பதுக்க ஆரம்பித்துள்ளனர். விபத்து நடந்து 13 ஆண்டுகள் கடந்திருந்தாலும் கதிர்வீச்சு அபாயம் இன்னும் விலகவில்லை என்பது தெளிவாகிறது. “உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா என்று கேட்ட காலம் போயி, இப்ப உங்க உப்புல கதிர்வீச்சு இருக்கா”? என்று கேட்கும் காலத்திற்கு வந்ததுதான் அணு உலைகள் செய்த சாதனை” என்று குறிப்பிட்டுள்ளார்.