சென்னை மாநகராட்சியில் தெருவோர உணவு மற்றும் பிற வியாபாரங்களில் ஈடுபட்டுள்ள 35,000 வியாபாரிகளுக்கு, அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தொழில் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சென்னையில் 3 பகுதிகளை மட்டுமே சாலையோர உணவு விற்பனைக்கு ஒதுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சியில் 35 தெருவோர வியாபாரிகள் உள்ளனர். இதில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உணவு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இவர்களை ஒழுங்குப்படுத்தும் வகையில், மண்டல வாரியாக நகர விற்பனைக்குழு அமைக்கப்பட்டது. சென்னையில் விற்பனை செய்யக்கூடாத இடங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட இடங்கள் என பிரிக்கப்பட்டு, மண்டல வாரியாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, 350-க்கும் மேற்பட்ட தெருக்களில், சாலையோர வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மண்டல வாரியாக அமைக்கப்பட்ட நகர விற்பனைக்குழு கலைக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் தலைமையில் 15 பேர் அடங்கிய குழுவினர் அமைக்கப்பட்டன.
இதையடுத்து, சாலையோர வியாபாரிகளுக்கான நகர விற்பனை குழுவினருடனான முதல் ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 35 ஆயிரம் தெருவோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குவது, அவர்கள் விற்பனை செய்யக்கூடிய இடங்கள் மற்றும் விற்பனை செய்யக்கூடாத இடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக, சாலையோர கடைகளில், உணவு விற்பனையில் ஈடுபடுவோருக்கு 3 இடங்களில் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தெருவோர உணவு விற்பனை கடைகளுக்கு ஆண்டுதோறும் குறைந்தது ரூ.100 என்ற அளவில், தொழில் வரி வசூலிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த முடிவுக்கு, சாலையோர வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.