சென்னை புறநகர் ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் பிரதான பொது போக்குவரத்து சேவையாக ரயில் சேவை உள்ளது. வேலைக்கு செல்வோர், கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும்பாலும் இந்த மின்சார ரயிலில் தான் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் ரயில்கள் காலை 10.18 முதல் பிற்பகல் 2.45 வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்கள் காலை 9.08 முதல் பிற்பகல் 3.20 வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 2.20 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.30 புறப்படும் ரயில், திருமால்பூரில் இருந்து காலை 11.05-க்கு புறப்படும் ரயில்களும், செங்கல்பட்டில் இருந்து காலை 10 ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரம் – செங்கல்பட்டு இடையே பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தாம்பரம் – செங்கல்பட்டு இடையே காலை 11.51, பகல் 12.35, 1.15, 1.35, 1.55, பிற்பகல் 2.45, 3.10, 3.30 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதே போல் செங்கல்பட்டு – தாம்பரம் இடையே காலை 9.30, பகல் 12.00 மணி, 1.00 மணி, 1.15 மணி, பிற்பகல் 2.20 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.