மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதையொட்டி பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் கிழக்கு உ.பி.யில் வாராணசி உள்ளிட்ட 13 தொகுதிகளுக்கு கடைசி கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாராணசி எம்.பி.யாக இரண்டாவது முறையாக தொடரும் பிரதமர் நரேந்திர மோடி, இங்கு மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். வாராணசியில் 8-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைகிறது. இந்நிலையில் இங்கு கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்.
இதையொட்டி இதற்கு முதல் நாளில் இருந்தே வாராணசியில் பிரம்மாண்ட ஊர்வலங்கள் நடைபெற உள்ளன. உ.பி,யின் புனித நகரமான வாராணசியின் மால்தஹியாவில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இன்றும் அதேபோல் படேல் சிலைக்கு பிரதமர் மாலை அணிவிக்க உள்ளார். நேற்று பிரதமர் மோடி பிரம்மாண்டமான ’ரோடு ஷோ’ வாராணசியில் நடத்தினார்.