தமிழகத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் போதை பொருட்களை ஒழிப்பது தொடர்பாக காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று முன்தினம் உயர் காவல் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார். இந்நிலையில் சென்னையில் போதை பொருட்கள் ஒழிப்பது குறித்து காவல் துறை கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவல் துறை கமிஷனர் சங்கர் ஜிவால் கூறிய அறிவுரைகள் வருமாறு:-
சென்னையில் போதை பொருள் ஒழிப்புக்கான சோதனைகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதை தடுக்க சென்னை எல்லைகளில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும். இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாவதை தடுக்க பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் அருகே தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். போதை பொருட்களை கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
அவர்களுடைய சொத்துக்களை முடக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வெண்டும். மேலும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு காவல் அதிகாரிகள், காவல்துறையினர் யாரேனும் உடந்தையாக இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதை பொருட்களின் தீங்கு, விளைவுகள் குறித்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு முகாம்களை நடத்தபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் கூடுதல் காவல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, அன்பு, இணை கமிஷனர்கள் ரம்யா பாரதி, ராஜேஸ்வரி போன்ற உயர் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.