கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செரியநாடு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் கன்னவார். இவர், கடந்த 2009இல் வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இந்த கொலை சம்பவம் அரங்கேறியபோது, பாஸ்கரின் மாற்றுத்திறனாளி மகன் பீட்டர், அவரின் மனைவி ஷெரின் மற்றும் குழந்தை ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர்.
பாஸ்கர் தனி அறையில் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டது மற்றவர்களுக்கு தெரியவில்லை. மறுநாள் காலையில் பணிப்பெண் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தான் அவர் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், பாஸ்கரின் மருமகள் நடத்தையில் சந்தேகம் இருந்ததால், அவரின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது, பாஷித் அலி என்பவருடன் சம்பவத்தன்று 54 முறை பேசியுள்ளார்.
இதையடுத்து, அவர் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டார். விசாரணையில், மாமனார் பாஸ்கரை ஷெரின் தனது ஆண் நண்பர் பாஷித் அலி மற்றும் அவரின் நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டியது வெளிச்சத்திற்கு வந்தது. பாஸ்கரை கொலை செய்ய பாஷித் அலி தனது கூட்டாளிகளுடன் வந்தபோது, வீட்டின் கதவை ஷெரினே திறந்து விட்டுள்ளார். இந்த வழக்கில், பாஷித் அலியும் அவரின் இரு கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். ஷெரின் பீட்டரை திருமணம் செய்வதற்கு முன் பல ஆண்களை காதலித்து பணத்தை சுருட்டியதும் விசாரணையில் அம்பலமானது.
கடைசியாக பாஷித் அலியுடன் ஷெரின் தொடர்பில் இருந்துள்ளார். ஆனால், இந்த தகாத உறவுக்கு பாஸ்கர் தடையாக இருந்ததால் அவரை கொலை செய்துவிட்டு, சொத்துக்களை அபகரிக்க ஷெரின், பாஷித் அலி ஆகியோர் திட்டமிட்டிருந்துள்ளனர். இந்த வழக்கில் கடந்த 2010ஆம் ஆண்டு ஷெரினுக்கு 3 ஆயுள் தண்டனையும், மற்றவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.
தற்போது இது பெரிய விஷயம் கிடையாது. நன்னடத்தை காரணமாக திடீரென்று ஷெரினுக்கு விடுதலை அளித்திருப்பதுதான் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. சிறைக்கு சென்ற பிறகும் ஷெரின் திருந்தவில்லை. அங்கிருந்து கொண்டே போலீஸ் அதிகாரிகளை கவர தொடங்கியுள்ளார். பல அதிகாரிகளை தனது கட்டுக்குள் கொண்டு வந்து சிறையில் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். சிறையில் இருந்தபடியே அமைச்சர்கள் வரை ஷெரினுக்கு தொடர்பு இருந்துள்ளது.
பொதுவாக, கைதிகளின் நன்னடத்தை குறித்து அரசுக்கு அறிக்கை தர சிறைத்துறை டி.ஜி.பி. மற்றும் கேரள பெண்கள் கமிஷன் தலைவர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர், யாரை விடுதலை செய்யலாம்..? என்று முடிவு செய்யும். அந்த குழு அளித்த அறிக்கையின்படி, முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில்தான் ஷெரினை விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டது.
இதுதான் இப்போது சர்ச்சையாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களை விடுவிக்காமல், ஷெரினை விடுவித்ததுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்ணூர் சிறையில் இருக்கும் ஷெரின் 2023ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி 14 ஆண்டுகள் தண்டனையை நிறைவு செய்தார். இவர், ஆரம்பத்தில் பூஜப்புரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, நெய்யாற்றின்காரா பெண்கள் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு மொபைல் பயன்படுத்தியதால், விய்யூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
விய்யூரில் சிறையில் மருத்துவர் ஒருவருடன் இருந்த உறவு காரணமாக 2017ஆம் ஆண்டு ஷெரின் திருவனந்தபுரத்தில் உள்ள பெண்கள் சிறைக்கு மாற்றப்பட்டார். பின்னர் கடைசி 2 ஆண்டுகள் கண்ணுர் சிறையில் இருந்தார். தொடர்ந்து, நன்னடத்தையின் அடிப்படையில் தன்னை விடுவிக்கக் கோரி விண்ணப்பித்தார். இது போன்ற விண்ணப்பங்கள் பல காலம் கிடப்பில் இருக்கும். ஆனால், ஷெரினின் விண்ணப்பம் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு, விடுதலை செய்யவும் அரசுக்கும் பரிந்துரை செய்துள்ளது.
இவர் விவகாரத்தில் பல விஷயங்களை அதிகாரிகள் மறைத்துள்ளனர். சிறை மாற்றம் செய்யப்படும் போது, போலீஸ் வேனில் செல்லாமல் ஸ்கார்பியோ காரில் ஷெரினை அழைத்துச் சென்றுள்ளனர். சிறைத்துறை, நீதித்துறை அறிக்கையும் ஷெரினுக்கு சாதகமாக வழங்கப்பட்டது. முக்கியமாக சிறை கண்காணிப்பாளரிடம் இருந்து நன்னடத்தை சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஷெரின், கிட்டத்தட்ட 452 நாட்கள் பரோலில் இருந்துள்ளார். 14 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக அவருக்கு பரோல் வழங்கப்பட்டது எப்படி? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ள நிலையில், சிறையில் ஷெரினுடன் இருந்த சுனிதா பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து சுனிதா கூறுகையில், கடந்த “2013ஆம் ஆண்டு ஆத்துக்குளங்காரா சிறையில் அவருடன் இருந்தேன். அவருக்கு பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, ஃபோன் தரப்பட்டது. முகம் பார்க்கும் கண்ணாடி, மேக்கப் செட், அவருக்கு தனியாக சுடிதார் வழங்கப்பட்டன. சிறையில் இருக்கும்போது, அவர் யூனிபார்ம் அணிய மாட்டார். சுடிதார் அணிந்து வலம் வருவார். சிறை உணவு சாப்பிட மாட்டார். 3 வேளையும் வெளியே இருந்து உணவு வரும். சிறைத்துறை டி.ஜி.பி பிரதீப் ஷெரினுடன் நெருங்கி பழகினார்.
வாரத்துக்கு ஒரு முறை ஆத்தாக்குளங்கரா சிறைக்கு பிரதீப் வருவார். இரவு 7 மணிக்கு மேல் அனைத்து கைதிகளும் செல்லுக்குள் அடைக்கப்பட்ட பிறகு, ஷெரின் மட்டும் வெளியே அனுப்பப்படுவார். பின்னர் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு தான் மீண்டும் செல்லுக்கு வருவார். 2 அமைச்சர்களுடனும் ஷெரின் தொடர்பில் உள்ளார். கண் தெரியாத பெண் கைதிகள் கூட 20 ஆண்டு காலம் சிறையில் உள்ள நிலையில், அவர்களை விடுவிக்க அரசு முடிவு செய்யவில்லை. ஆனால், கொலையும் செய்து விட்டு, அதிகாரிகளை கைக்குள் போட்டு, உல்லாச வாழ்க்கை வாழும் ஷெரினை விடுவிப்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.