உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள ரயில்வே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக திருட்டு வழக்கில் தொடர்புடைய பிரிஜேந்திரா (27) சைலேந்திரா (20), ஞானபிரசாத் (23) ஆகிய 3 உள்பட 7 பேரை போலீசார் வேனில் அழைத்து வந்தனர். நீதிமன்றத்திற்கு வெளியே வேனை நிறுத்திவிட்டு, போலீசார் தேநீர் அருந்தியுள்ளனர். அப்போது பிரிஜேந்திரா, சைலேந்திரா, ஞானபிரசாத் ஆகியோர் அங்கிருந்து தலைதெறிக்க தப்பியோடினர். இதுதொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேனுக்குள் இருந்த அவர்கள், போலீஸ் பாதுகாப்பின்றி விடப்பதை உணர்ந்து தப்பி சாலையில் ஓடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. தப்பியோடிய கைதிகள் இதுவரை யாரும் பிடிபடவில்லை. கைதிகள் தப்பியதில் அலட்சியமாக இருந்ததாக 3 எஸ்.ஐக்கள் உட்பட 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்றும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்க 2 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. தப்பியோடிய 3 குற்றவாளிகளும் ரயில் நிலையங்களில் செல்போன் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருடியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள். காவல்துறை பாதுகாப்பில் இருந்த 3 கைதிகள் தப்பியோடிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.