தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழக அரசின் சார்பில் சிறப்புத் தொகுப்புடன் ரூ.1000 பணம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, ரொக்கப் பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி, சர்க்கரை, பருப்பு, முந்திரி, திராட்சை, நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்கியது. ரொக்கப் பணம் வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது.
இதில், பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகை கால சமையலுக்கு தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய தொகுப்பு 2,15,48,060 குடும்பங்களுக்கு, மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட்டது.
முதலமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம் – எடுக்கப்பட்ட முடிவுகள்
இந்நிலையில், 2023 பொங்கல் பண்டிகைக்கான பரிசு தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள் வழங்குவது, பொருட்களை எவ்வாறு கொள்முதல் செய்வது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இன்று அல்லது நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் பொங்கல் தொகுப்பு குறித்து தமிழக அரசின் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 பரிசு தொகை வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் கடைகளின் மூலமாக பொங்கல் பரிசுப் பணம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானவுடன், சென்னை தலைமைச் செயலகத்தில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை, வரும் ஜனவரி மாத முதல் வாரத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாகவும் ஒரு கூடுதல் தகவல் வெளியாகி உள்ளது