தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு வெல்லம், மற்றும் ரொக்கப் பணம் போன்ற பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். ஆனால், கடந்த ஆண்டு மக்களுக்கு பொங்கல் பரிசாக மளிகை பொருட்கள், கரும்பு, நெய் மற்றும் வெல்லம் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. பலரும் பெரியளவில் எதிர்பார்த்த 1000 ரூபாய் ரொக்க பணமானது வழங்கப்படவில்லை.
மேலும் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட பொருட்கள் தரமற்ற முறையில் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டிய நிலையில், ஆளும் கட்சியை எதிர்க்கட்சிகள் சரமாரியாக விளாசினர். இதன் காரணமாக அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், நடப்பாண்டில் பொங்கல் பரிசு தொகுப்போடு சேர்த்து 1000 ரூபாய் ரொக்க பணத்தையும் வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அந்த பணம் நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை பெறுவதற்கு ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக முறைகேடுகள் நடைபெறாமல் உரிய நபருக்கு பணம் சென்று சேரும். அத்துடன் தமிழகம் முழுவதும் 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதில் 14.60 லட்சம் பேருக்கு வங்கி கணக்கு கிடையாது. இவர்கள் அனைவரும் ஒரு வாரத்திற்குள் கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும்போது ரேஷன் கடைகளில் மஞ்சள் பை வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ரேஷன் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு பொருட்களை மஞ்சள் பையில் வழங்கினால் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என்ற விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் ஏற்படுமாம். இதனால்தான் மஞ்சள் பை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.