போப் பிரான்சிஸ் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால், வத்திக்கானில் அவரது இறுதி ஊர்வலத்திற்கான ஒத்திகைகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவராக இருந்து வருபவர் போப் பிரான்சிஸ். இவருக்கு வயது 88. இந்நிலையில், இவரின் இரு நுரையீரல்களிலும் நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், இத்தாலியின் ரோம் நகரத்தில் உள்ள கெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற அறிகுறிகள் அவருக்கு இருந்துள்ளது.
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது தான் அவருக்கு நிமோனியா இருப்ப்து கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்துள்ளதாகவும், ஆனால் அவர் எப்போதும் போல செய்தித்தாள் படிப்பது, பிரார்த்தனைகள் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
போப் பிரான்சிஸ் இளம் வயதிலேயே நுரையீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். தனது 21 வயதில் அவருக்கு நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது. இதனால், அவர் நுரையீரல் தொற்றுக்கு ஆளாக நேரிடும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. 2025 கத்தோலிக்க புனித ஆண்டிற்கான வார இறுதியில் போப் பிரான்சிஸ் பல நிகழ்வுகளுக்கு தலைமை தாங்க திட்டமிட்டிருந்த நிலையில், அனைத்து பொது நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான், போப் பிரான்சிஸ் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால், வத்திக்கானில் அவரது இறுதி ஊர்வலத்திற்கான ஒத்திகைகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போப் பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், மருத்துவமனை முன்பு கத்தோலிக்க மக்கள் திரண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இறுதிச் சடங்கிற்கான எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை என்றும், சுவிஸ் படைகள் வழக்கமான நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டு வருவதாகவும் சுவிஸ் படைகளின் தலைவர் Christian Kühne விளக்கம் அளித்துள்ளார்.