சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே எம்செட்டிபட்டி பகுதியில் வசிப்பவர் மூர்த்தி (30). இவர், நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மூர்த்திக்கு ரக்ஷிதா என்ற பெண் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ளார். இவர் ஒரு பியூட்டிஷியன். இதையடுத்து மூர்த்தியும், ரக்ஷிதாவும், நட்பாக பழகி வந்துள்ளனர். பிறகு ஒருவருக்கொருவர் மெசேஜ்களை அனுப்ப ஆரம்பித்தனர்.. பிறகு, தனிமையில் சந்தித்து பேச தொடங்கியுள்ளனர்.. பிறகு, ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்துள்ளனர்.. இறுதியில், கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி இருவரும் ஓமலூர் ஈஸ்வரன் கோவிலில் திருமணமும் செய்து கொண்டனர்.
இந்நிலையில், தொளசம்பட்டி காவல்நிலையத்திற்கு அலறியடித்து கொண்டு வந்தார் மூர்த்தி. அப்போது ஒரு புகாரையும் அளித்தார். அதில், “இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான பியூட்டீஷியன் ரஷீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டேன். 3 மாதம் ஒன்றாக வாழ்ந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி காலையில் இருந்து அவரை திடீரென காணவில்லை. வீட்டில் இருந்த 4 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு மாயமாகி விட்டார். அவரை கண்டுபிடித்து தர வேண்டும்” என்று கூறியிருந்தார்.
போலீசாரும் இந்த புகாரின்பேரில் ரக்ஷிதாவை தேட ஆரம்பித்தனர்.. இதற்காக ரக்ஷிதாவின் சோஷியல் மீடியா பக்கங்களை ஆய்வு செய்தனர். அதில், ரக்ஷிதா பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் ஏகப்பட்ட அக்கவுண்ட்களை வைத்திருக்கிறாராம் ரக்ஷிதா.. ஒவ்வொரு போலி அக்கவுண்ட்டுக்கும், தனக்கு ஒவ்வொரு பெயர்களை வைத்து கொண்டுள்ளார்.. வசதியான ஆண்களாக பார்த்து நட்பு வைத்துள்ளார்.. அவர்களை நேரில் சந்திப்பாக சொல்லி, பிறகு காதலித்து திருமணமும் செய்து கொள்வாராம். கடைசியில் கிடைத்ததை சுருட்டிக்கொண்டு மாயமாகிவிடுவதை வழக்கமாக வைத்திருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
பல ஆண்களுடன் ஆபாச சாட்டிங் செய்து அவர்களை மயக்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.. சொகுசு கார்கள், பைக்குகளில், விதவிதமான போஸ்களை தந்து போட்டோ எடுத்துள்ளார்.. இந்த கவர்ச்சி வலையில் பெரும்பாலான ஆண்களும் விழுந்துள்ளனர்.. ஒரே ஒரு சொந்தக்காரர்கூட இல்லாமல், இத்தனை கல்யாணங்களையும், தனியே நடத்தியுள்ளார்.. ரக்ஷிதாவுடன் பழகியதுமே, அவரை பற்றின வண்டவாளம் மூர்த்திக்கு தெரிந்துள்ளது.. உடனே அவரிடம் பணத்தை சுருட்டிக் கொண்டு ரக்ஷிதா ஓட்டம் பிடித்து விட்டார்.
இதற்கிடையே, கடந்த மாதம் 20ஆம் தேதி கோவை மாவட்டம் துடியலூர் மகளிர் காவல்நிலையத்தில் 33 வயது பெண் ஒருவர் புகார் கொடுத்தார்.. அதில், தனது கணவர் சத்ய கணேஷ், ரக்ஷிதா என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, தன்னிடம் பணம் கேட்டு பிரச்சனை செய்கிறார் என்று கூறியுள்ளார்.. இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்ற விஷயம், தொளசம்பட்டி போலீசாருக்கு தெரியவந்தது. அப்போதுதான், பைனான்சியர் மூர்த்தியை ஏமாற்றிய ரக்ஷிதாதான், இந்த ரக்ஷிதா என்று தெரியவந்தது.. அங்கேயும் நகை, பணத்துடன் மாயமாகி உள்ளார்.
இப்போது விஷயம் என்னவென்றால், இதுவரைக்கும் ரக்ஷிதா 8 கல்யாணம் செய்திருக்கிறாராம்.. இப்போது அவரை காணவில்லை.. மூர்த்தியின் வீட்டில் இருந்து மாயமானதில் இருந்தே ரக்ஷிதாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகியிருக்கிறதாம்.. இதனால், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதுகுறித்து தொளசம்பட்டி போலீசார் கூறுகையில், புகார் கொடுத்தவர் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். அவரது அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களை விசாரித்தபோது, அப்படி ஒரு பெண்ணையே இவருடன் சேர்ந்து பார்க்கவில்லை என்கிறார்கள்.. அதனால், முழுமையாக விசாரித்து தான் வழக்கு பதிவு செய்வோம்.. புகார் கொடுத்ததற்கான ரசீது மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை எப்ஐ.ஆர் பதிவு செய்யவில்லை” என்றனர்.