ஆந்திர அரசியலில் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. திறன் மேம்பாட்டு வழக்கில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதையடுத்து, திடீரென பரபரப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் பண்டாரு சத்திய நாராயண் மூர்த்தி, நடிகையும், ஆந்திர மாநிலம் சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரோஜா பேசியதாவது, “நான் ஆபாச படத்தில் நடித்ததாக கூறி அவதூறு செய்கிறார்கள், நான் நிர்வாண படத்தில் நடித்ததாக கூறி சட்டசபையில் சிடிக்களை காட்டி அவதூறு செய்தார்கள். தெலுங்குதேசம் கட்சி பெண்களை விளையாட்டு பொருட்களாக பார்க்கிறது. உங்கள் வீட்டு பெண்கள் குறித்து இப்படி தரம்தாழ்ந்து பேசினால் நீங்கள் இதை ஏற்றுக்கொள்வீர்களா” என்று கேள்வி எழுப்பினார்.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபுநாயுடு மற்றும் அவரது மகன் நர லோகேஷ் உள்ளிட்டோர் பண்டாருவை கண்டிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பிய ரோஜா, தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கிய என்.டி.ராமாராவ் கூட சினிமா துறையில் இருந்து வந்தவர்தான் என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், நான் நிர்வாண படத்தில் நடித்தவள் என்றால் என்னை ஏன் சந்திரபாபு நாயுடு தனது கட்சியில் சேர்த்தார். உங்கள் கட்சியில் இருந்த போது நல்லவராக தெரிந்த நான் வேறு கட்சிக்கு சென்றுவிட்டபோது எப்படி கெட்டவராக இருக்க முடியும். தெலுங்கு தேசம் கட்சியில் பெண்களுக்கு சிறிதளவும் கூட மரியாதை இல்லை.
தெலுங்கு தேசம் கட்சியால் அரசியலில் வளர்ச்சி அடைய முடியாது. என்னை அவதூறாக பேசிய பண்டாரு சத்ய நாராயண மூர்த்தி மீது மானநஷ்ட வழக்கு தொடரவுள்ளேன்” என்று அமைச்சர் ரோஜா கூறினார். மேலும் இது குறித்து பேசிக்கொண்டிருந்த போது அமைச்சர் ரோஜா கண்கலங்கிய காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அமைச்சர் ரோஜா ஆகியோருக்கு எதிராக தரக்குறைவான கருத்து தெரிவித்ததாக தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி திங்கள்கிழமை கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.