அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி 3-வது முறையாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் ஆஜராகி, ”இந்த வழக்கில் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கில் இருந்த தொகையை திருத்தி பொய்யாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களை எங்களிடம் உள்ளது. விவசாயம் மூலம் கிடைத்த வருமானத்தை அமலாக்கத்துறை கணக்கில் கொள்ளவில்லை. ஆவணத்தில் உள்ள தேதிகளை விசாரணைக்கு ஏற்ற வகையில் அமலாக்கத்துறை மாற்றி உள்ளது” என்று குற்றம் சாட்டினார்
இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷன் ஆஜராகி, ”கடந்த 2016 – 2017ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் திடீரென பல லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பென்- டிரைவில், வேலைவாய்ப்பு தொடர்பாக யார், யாரிடம் எவ்வளவும் தொகை பெறப்பட்டது, அவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருந்தது. வங்கி ஆவணங்களைத் திருத்தியதாகக் கூறும் குற்றச்சாட்டுகள் ஏற்புடையதல்ல” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து வாதிட்ட அவர், “செந்தில் பாலாஜியிடம் விசாரணை நிறைவு பெற்றது. சாட்சிகளிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடத்தத் தேவையில்லை. இலாகா இல்லாத அமைச்சராக இன்னும் தொடர்வதால், சமூகத்தில் அதிகாரமிக்க நபராகத் தொடர்கிறார். செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தற்போது வரை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காமல் தலைமறைவாக உள்ளார். எனவே, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என வாதிட்டார். இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கில் ஜனவரி 12ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி அல்லி அறிவித்தார்.