தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயற்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இத்துறையின் அரசாணை படி மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்புப் பணிகள் வழங்கப்பட்டு வருவது தேசிய அளவில் ஓர் முன்னோடி முயற்சியாகும்.
இது குறித்து விரிவான அறிவுரைகள் அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள நிலையில் இத்திட்ட வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பிரத்யேக நீல நிறத்திற்கான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இது வரை 170,767 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளது குறைகளை தீர்க்கும் விதமாக பிரதி மாதம் 2-வது செவ்வாய்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும் இருமாதங்களுக்கு ஒரு முறை இரண்டாவது செவ்வாய்கிழமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) 7 திட்ட இயக்குனர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்கள் முன்னிலையில் குறைகேள் முகாம்கள் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. நாளை கடைசி நாள் என்பதால் இந்த முகாமினை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியைச் சார்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் நீல நிற வேலை அட்டையினை பெற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.