மராட்டிய மாநிலம் கடக்வாடி பகுதியை சேர்ந்தவர் 25 வயதான அனில் பவார். இவருக்கு 27 வயதான ரேகா என்ற மனைவியும், 7 வயதான மகனும், 3 வயதான மகளும் உள்ளனர். இவர்களுடன் அனில் பவாரின் அண்ணன் மகனும் வசித்து வந்துள்ளார். மேலும் ரேகா தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 25 நாட்களுக்கு முன்பு அனில் பவார் தனது குடும்பத்துடன் திருப்பூர் ராக்கியாபாளையம் கணபதிநகருக்கு குடி வந்துள்ளார். இந்நிலையில், கணவன்-மனைவி இருவரும் திருமுருகன்பூண்டி நகராட்சியில் தனியார் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்களாக வேலை செய்து வந்துள்ளனர்.
நேற்று காலை கணவன் மனைவி இருவரும் வேலைக்கு வராததால், ஒப்பந்ததாரர் அணில் பவாரின் வீட்டிற்க்கு சென்றுள்ளார். இதையடுத்து நீண்ட நேரமாக வெளியில் நின்று அனில் பவாரை அழைத்தும் யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஒப்பந்ததாரர் கதவை திறந்து உள்ளே பார்த்த போது, ரேகா மயங்கி கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஒப்பந்ததாரர், திருமுருகன்பூண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அனுப்பர்பாளையம் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரேகா உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, போலீசார் ரேகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதையடுத்து திருப்பூர் ரெயில் நிலையத்தில் தப்பி செல்ல முயன்ற அனில் பவாரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அனில் பவார் குடித்து விட்டு வீட்டிற்க்கு வந்து, சாப்பாடு செய்யவில்லையா? என கேட்டு ரேகாவிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த அனில் பவார் விறகு கட்டையை எடுத்து ரேகாவை தாக்கியுள்ளார். இதில் ரேகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து அனில் பவாரை போலீசார் கைது செய்தனர்.