தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையின் கீழ் புதிய அறிவிப்புகளை அமைச்சர் ரகுபதி வெளியிட்டார். அதன்படி, சிறைவாசிகள் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், சிறைவாசிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள தற்போது வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதிக்கான கால அளவை 3 நாட்களுக்கு ஒரு முறை, மாதத்திற்கு 10 முறை, ஒரு அழைப்பிற்கு 12 நிமிடங்கள் என உயர்த்தி வழங்குவதோடு, வீடியோ கால் மூலம் பேசும் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றார்.
சிறைவாசிகளுக்கு தற்போது வழங்கப்படும் உணவுமுறை கூடுதல் செலவுடன் மாற்றி அமைக்கப்படும், சிறைவாசிகளால் தயாரிக்கப்படும் சிறைச் சந்தை பொருட்களை Freedom என்ற குறியீட்டு பெயரில் தமிழ்நாடு காவலர் அங்காடியில் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் ரகுபதி அறிவித்தார். சிறைத்துறையில் பணியாற்றி வரும் முதல் மற்றும் 2ஆம் நிலை சிறைக் காவலர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் இடர் படி உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும், சிறைத்துறை துணைத் தலைவர் பதவியை சிறைத்துறை தலைவர் என்று தரம் உயர்த்தப்படும் எனவும் அறிவித்தார்.