சொத்து தகராறு காரணமாக தங்கை மற்றும் தங்கையின் கணவரை ஓட ஓட விரட்டி கொன்ற அண்ணன் மற்றும் அவரது மகனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகர் 6-வது தெருவைச் சேர்ந்த ராம்குமார். இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள் அதே பகுதியில் வசித்து வரும் தனது அண்ணன் முருகேசன் என்பவரின் வீட்டை விலைக்கு வாங்கி குடியிருந்து வருகிறார். இந்த வீட்டை விலைக்கு வாங்கியது தொடர்பாக மாரியம்மாள் குடும்பத்தினருக்கும் அவரது அண்ணன் முருகேசன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு முருகேசன் மற்றும் அவரது மகன் மகேஷ் இருவரும் அண்ணாநகர் 6-வது தெருவில் வைத்து ராம்குமாரை ஓட ஓட விரட்டி கொன்றுவிட்டு வீட்டிலிருந்த அவரது மனைவி மாரியம்மாளை சொந்த தங்கை என்றும் பாராமல் இருவரும் சேர்ந்து வெட்டிப் படுகொலை செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இருவரது சடலங்களையும் கைப்பற்றி கொலை செய்த இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.