கோவாவுக்கு சுற்றுலா சென்ற புதுச்சேரி மாணவன், அதிகளவு போதைப் பொருள் உட்கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தனது நண்பர்களுடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு சில நாட்களாக தனது நண்பர்களுடன் சேர்ந்து இரவு நேர விருந்துகளில் கலந்து கொள்வதை அந்த மாணவர் வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்றும் அவர் இரவு நேர விருந்தில் கலந்து கொண்டு அதிக அளவு போதை பொருள் உட்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அங்கேயே மயக்கமடைந்துள்ளார். உடனே அவரை மீட்டு கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நண்பர்கள் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில், மேல் சிகிச்சைகாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், போதை மருந்தை அதிகமாக உட்கொண்டதால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் உடற்கூராய்வு முடிவு வெளிவந்த பிறகே இதன் உண்மையான தகவல்கள் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இது இயற்கைக்கு மாறான மரணம் என காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இறந்த மாணவனின் நண்பர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.