மிகப்பெரும் திருவிழாவான மஹா கும்பமேளா 66.21 கோடி பேர் பங்கேற்று புனித நீராடியுள்ள நிலையில், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா 45 நாட்கள் நடைபெற்ற கடந்த 26ம் தேதி நிறைவடைந்தது. 144 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மகா கும்பமேளா உலகின் மிக பெரிய ஆன்மிக ஒன்றுகூடலாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு புனித நீராடி மகிழ்ந்தனர். திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் ஒன்றுகூடும் இடத்தில் புனித நீராடினால் மோட்சம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மகா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடினர்.
கும்பமேளா ஆரம்பம் முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்துக்கொண்டே இருந்தது. கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜ் நகரை இணைக்கும் சாலைகள், ரயில் நிலையங்கள் அனைத்தும் பக்தர்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது. திரை பிரபலங்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை பலரும் திரிவேணி சங்கமத்தில் நீராடினர். பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரும் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு புனித நீராடினர். இந்த கும்பமேளா நிகழ்வில் பல சுவாரசிய நிகழ்வுகளும் நடைபெற்றது.
இறுதியாக, கடந்த 26ம் தேதி மகா கும்பமேளா கோலாகலமாக நிறைவடைந்தது. இதுவரை சுமார் 66 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதாக கூறுகின்றனர். அதேபோல் இனி அடுத்த மகா கும்பமேளா 2169ம் ஆண்டு நடைபெறும் எனவும் கூறுகின்றனர். இந்தநிலையில், புதிய சாதனைகள் கின்னஸ் அமைப்பால் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டன.
ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் 80 அடி நீளம், 5 அடி அகல துணியில் 10,000 பேர் பங்கேற்று கையால் வரைந்த ஓவியம்; 15,000 துாய்மை பணியாளர்கள் இணைந்து ஒரே நேரத்தில் விழா நடந்த இடத்தில் துாய்மை பணி மேற்கொண்டது உள்ளிட்ட புதிய சாதனைகள் கின்னஸ் அமைப்பால் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டன. இதற்கான சான்றிதழை முதல்வரிடம் கின்னஸ் அமைப்பினர் வழங்கினர். இதற்கு முன் 10,000 பேர் ஒரே நேரத்தில் துாய்மை பணி மேற்கொண்டதே சாதனையாக இருந்தது.
Readmore: எலக்ட்ரிக் துறையில் புரட்சி செய்யும் இந்தியா.! லித்தியம் பேட்டரி கழிவுகளால் என்ன நடக்கப்போகிறது!