நீங்கள் நலமா” திட்டத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “எல்லோருக்கும் எல்லாம்” கிடைக்க வேண்டும் என்ற பேர் ஆவலின் வெளிப்பாடாக அவர்களின் மற்றொரு மகத்தான திட்டமான “நீங்கள் நலமா” திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அதனை உடனே செயல்படுத்தும் விதமாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பொதுவிநியோகத் திட்டம், பகுதிநேர நியாயவிலைக் கடை, ராகி மற்றும் நெல் கொள்முதல் குறித்து திருவாரூர், கடலூர், திருச்சிராப்பள்ளி, ஈரோடு, தென்காசி, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 8 பேர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தார்.
அரிசி மிகவும் தரமாக உள்ளதாகவும் வழங்கப்படும் பொருள்கள் அனைத்தும் நன்றாக உள்ளதாகவும் கடை தற்போது அருகில் உள்ளதால் வசதியாக இருப்பதாகவும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் தென்னூரைச் சேர்ந்த திருமதி இ. இளவரசி அவர்கள் கூறினார். நெல் கொள்முதலில் பணியாளர்கள் சிறப்பாகச் செயல்படுவதாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் நன்றாகச் செயல்படுவதாகவும் புதிய கொள்முதல் நிலையம் ஒன்று வேண்டும் என்று கடலூர் மாவட்டம் வான்ராசான் குப்பத்தைச் சேர்ந்த நெல் விவசாயி ப. அறவாழி அவர்கள் கூறினார்.
ஈரோடு மாவட்டம் நசியனூர் வெட்டுவபாளையத்தைச் சேர்ந்த திருமதி. பூங்கொடி அவர்கள் பொதுவிநியோகத் திட்டம் சிறப்பாகச் செயல்படுவதாகவும் கடை உரிய நேரத்தில் திறக்கப்படுவதாகவும் குறை ஏதுமில்லை என்றும் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் கனிமங்களம் திருமதி. என். அஸ்வினி மற்றும் திரு. என். திம்மராஜ் ஆகிய இருவரிடமும் அவர்கள் கிராமத்தில் பொது விநியோகத்திட்டப் பகுதி நேர அங்காடி திறந்தது பற்றிக் கேட்டறிந்தார். முன்பு 8 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று பெற்று வந்த சிரமம் தற்போது இல்லாமல் அருகிலேயே அத்தியாவசியப் பொருள்கள் பெற்றுக் கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் பொருள்கள் தரமாகக் கிடைக்கின்றன என்றும் தெரிவித்தனர்.
தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் வட்டம், பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ச.மாரியப்பன் அவர்கள் ராகி கொள்முதல் ரூ. 25/- லிருந்து தற்சமயம் ரூ.38.40 உயர்த்தப்பட்டுள்ளது திருப்தியாக இருப்பதாகவும் மற்ற விவசாயிகளையும் ராகி கொள்முதல் நிலையத்திற்குக் கொண்டுவர கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.