அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை, குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அவதூறு வழக்கில் சூரத் கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி, ராகுல் காந்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மோடி சமூகத்திற்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புக்கு தடை கோரிய மனுவை சூரத் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் குஜராத் உயர்நீதிமன்றத்தை ராகுல் காந்தி நாடி இருந்தார். இந்நிலையில், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து, ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி “சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது தான். அதில் தலையிட விரும்பவில்லை. அவருக்கு எதிராக குறைந்தது 10 கிரிமினல் வழக்குகள் உள்ளன” என தெரிவித்துள்ளார்.