இன்று அரவிந்த் கெஜ்ரிவாலின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார் ராகுல் காந்தி.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை முதல்வர் கேஜ்ரிவாலுக்கு 9 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. இந்த சம்மன்களை எதிர்த்து கேஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் சுரேஷ் குமார் கெய்த், மனோஜ் ஜெயின் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. கேஜ்ரிவால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் முதல்வர் கேஜ்ரிவாலை கைது செய்ய அமலாக்கத் துறை முயற்சி செய்கிறது. இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றார்.
கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேஜ்ரிவால் தரப்பில் கோரப்படுகிறது. இப்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 22-ம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தனர். கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள கேஜ்ரிவாலின் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இரவு 9.20 மணி அளவில் அவர் கைது செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்துகின்றனர்.
இந்த நிலையில் இன்று அரவிந்த் கெஜ்ரிவாலின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார் ராகுல் காந்தி. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்திருந்தது தொடர் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் நேற்றிரவு கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். கெஜ்ரிவால் கைதுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.