எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து ராகுல்காந்தி அரசு பங்களாவை காலி செய்து வெளியேறினார்..
மோடி பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.. இதனை தொடர்ந்து ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டு, அவர் மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.. இதை தொடர்ந்து அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற செயலகம் உத்தரவிட்டிருந்தது.. இந்நிலையில் ராகுல்காந்தி அரசு பங்களாவை காலி செய்து வெளியேறினார்..
டெல்லி துக்ளக்லேன் சாலையில் உள்ள 12-ம் எண் பங்களாவில் ராகுல்காந்தி இதுவரை வசித்து வந்தார்.. இந்த நிலையில் இன்று அரசு பங்களாவை காலி செய்து, அரசிடம் ஒப்படைத்தார்.. இதன் மூலம் 19 வருடங்களாக வசித்து வந்த அரசு பங்களாவை ராகுல்காந்தி காலி செய்து வெளியேறி உள்ளார்.. இனி ராகுல்காந்தி டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள சோனியா இல்லத்தில் வசிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.. மக்களவை உறுப்பினர் என்ற வகையில் சோனியா காந்திக்கு டெல்லி ஜன்பத் சாலையில் அரசு பங்களா தரப்பட்டுள்ளது..
இதனிடையே சூரத் மாவட்ட நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ராகுல்காந்தி மேல்முறையீடு செய்துள்ளார்.. இந்த வழக்கு விசாரணை நடைபெற்றும் வரும் நிலையில், வரும் 20-ம் தேதி இதில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..