தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 27ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில், “வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும் என்றும் வரும் 27ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, கே.ஜி.கண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. காலையில் வேளையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் கனமழை பெய்தது. இதில், தென்னை மரம் சாய்ந்து விழுந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரை அடுத்த அண்டம்பள்ளம் கிராமத்தில் மணிலா பயிருக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த பிளஸ் 1 மாணவி வினோஷா, மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.