ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் மக்கள் பெரும் திரளாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் 2018ம் ஆண்டு மே 22 அன்று பொது மக்கள் மீது காட்டுமிராண்டி தனமாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டிற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இது குறித்து விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு தமிழக சட்டமன்றத்தில் அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதனை தொடர்ந்து 17 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
துப்பாக்கி சூட்டில் எந்த வித விதிமுறைகளும் கடைபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், இதில் உதவி எஸ்பி மற்றும் டிஐஜி உத்தரவில் நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கி சூடு ஐஜிக்கு கூட தெரியவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தூத்துக்குடியில் 2018ம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் அங்கு சென்று நேரில் பார்வையிட்ட நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தபோது, “சமூக விரோதிகளால் தான் போராட்டம் நடைபெற்றது.” என்று தெரிவித்தார்.
துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தில், “பிரபலமடைந்த ஒருவர் ஒரு கருத்தைத் தெரிவிக்கும்போது அவர் கூறும் தகவலின் ஆதாரத்தை உறுதி செய்திருக்க வேண்டும். இந்த நிலையில் அவர் சமூக விரோதிகள் கலவரத்தில் ஈடுபட்டதற்கு தன்னிடம் எந்த ஒரு ஆதாரமும் இல்லை.” என்று அருணா ஜெகதீசன் ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளார்.