ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் முன்பே இமயமலைக்கு சென்றுவிட்டார் ரஜினி. அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து அங்குள்ள ஆன்மீக தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தார். இதையடுத்து ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களுக்கு சென்ற அவர், அங்குள்ள கோவில்களுக்கு சென்றபோது அம்மாநிலங்களில் உள்ள அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசினார்.
இதையடுத்து, மீண்டும் சென்னை திரும்பிய ரஜினி, ஜெயிலர் படக்குழுவினருடன் அப்படத்தின் வெற்றியை கொண்டாடினார். இதையடுத்து லைகா நிறுவனம் தயாரிக்கும் தலைவர் 170 படத்தின் பூஜையில் கலந்துகொண்டார். த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது.
இந்நிலையில், திடீரென பெங்களூருக்கு சென்ற ரஜினி, ஜெயா நகரில் உள்ள பிஎம்டிசி பஸ் டிப்போவுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார். ரஜினி ஆரம்ப காலகட்டத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் இந்த பஸ் டிப்போவில் தான் வேலை பார்த்துள்ளார். அதனால் அங்கு சென்று அங்குள்ள ஊழியர்களிடம் தன்னுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.