சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளதாகவும், அனுமதி கிடைக்கும் பட்சத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆந்திரா சென்று சந்திரபாபு நாயுடுவை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த 2014 – 2019 வரை ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்தார். அவரது பதவிக் காலத்தில் மாநில திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவரை மாநில சிஐடி போலீசார், கடந்த 9ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்த நடிகர் ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். இதற்கு அமைச்சர் ரோஜா கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரஜினிகாந்த் சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவை சந்திக்க சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். அதற்கான அனுமதி வழங்கப்பட்டால், அவர் இன்று சந்திரபாபு நாயுடுவை சந்திப்பார் என தெரிகிறது.