அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டு வரும் நிலையில், அன்றைய தினம் உத்தரப்பிரதேச மாநில அரசு உட்பட பல்வேறு மாநிலங்களில் இறைச்சி விற்பனைக்கும், மதுபான கடைகளைத் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அன்றைய தினம் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஊழியர்கள் பங்கேற்கும் வகையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்கள் ஜனவரி 22ஆம் தேதி 2.30 மணி வரை அரை நாள் மூடப்படும் என பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஜனவரி 22ஆம் தேதி திங்கட்கிழமை வங்கிகளுக்கும் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தி ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அனைத்து பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், பொதுத்துறை நிதி நிறுவனங்கள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் ஜனவரி 22ஆம் தேதி மதியம் 2:30 மணி வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.