பிரபல நடிகை ரஞ்சிதா, பிரதமர் ஆகப்போகிறாராம். இதை பற்றிதான் ஒரே பேச்சாக இருக்கிறது. இது தொடர்பாக ஒரு போட்டோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நவீன விஞ்ஞான யுகத்தில், தொழில்நுட்பம் பெருகி வரும் காலகட்டத்தில், உலகின் எந்த மூலையில் இருந்தும் யார் வேண்டுமானாலும் யாரிடமும் எளிதாக அணுகலாம் என்ற சூழலில், உலகமே கைக்குள் அறிவியலாய் அடங்கிவிட்ட நிலையில், இன்னும் நித்யானந்தாவை மட்டும் கைது செய்ய முடியாத அதிசயம் நம் நாட்டில் நிகழ்ந்து வருகிறது. ஆனால், இன்று வரை அந்த கைலாசா தீவு எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. உலக மேப்பில் இன்னும் நம் போலீசார் தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.

கைலாசாவில் இருந்து வீடியோ, ஆடியோ, போட்டோக்கள் உள்ளிட்ட சுடசுட செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன. லைவ் டெலிகாஸ்ட்களும் நடக்கின்றன. இந்த கைலாசா என்பது மத்திய அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் உள்ள ஒரு தீவில் அமைந்துள்ளதாக சொல்கிறார்கள். அந்த நாட்டுக்கு செல்வதற்கு நம்ம ஊரில் இருந்து நிறைய பேர் அப்ளிகேஷன்கூட போட்டார்கள். கைலாசாவில் டீ கடை வைக்க போகிறேன், விவசாயம் செய்ய போகிறேன் என்று கூறி லெட்டர்களும் தமிழகத்தில் இருந்து பறந்தன.
ஆனால், கைலாசா எங்கே இருக்கிறது என்றுதான் தெரியவில்லை. இத்தனைக்கும் அந்த நாட்டுக்கான தனி பாஸ்போர்ட், ரூபாய் நாணயங்கள், தனிக்கொடி உள்ளிட்டவற்றை அறிவித்த நித்தி, வர்த்தக ரீதியில் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்களை செய்தவதாகவும் கூறியிருக்கிறார். அத்துடன், அந்த நாட்டு பிரதிநிதிகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது போன்ற போட்டோக்கள் கூட சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தன.
இதற்கிடையே, நித்யானந்தாவுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக திடீரென தகவல்கள் வெளியானது. ஆனாலும், அதற்கு பிறகும், சோஷியல் மீடியாவில் நேரலையில் தோன்றி சொற்பொழிவு ஆற்றிக்கொண்டு இருக்கிறார். இதுபோக, கைலாசா சார்பில் பெண் பிரதிநிதிகள் ஐநாசபை மாநாட்டில் பங்கேற்று பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. கைலாசா என்ற ஒரு நாடே இல்லாத போது, அதன் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றது எப்படி? என்றும் கேள்விகள் எழுந்தன. இதற்கு ஐநா செய்தி தொடர்பாளர்கள் ஒரு விளக்கம் அளித்திருந்தனர். பெண் பிரதிநிதி பங்கேற்று பேசியிருந்த பேச்சு எடுத்துக்கொள்ளப்படாது என்று கூறியிருந்தனர்.
இப்படி சர்ச்சை மேல் சர்ச்சை என ஹிட் அடித்து கொண்டிருக்கும் கைலாசா பற்றி இன்னொரு பரபரப்பு கிளம்பி உள்ளது. நடிகை ரஞ்சிதா, கைலாசா நாட்டுக்கு பிரதமராக போகிறாராம். கைலாசாவின் இணையதள செயலியான லிங்க்டு இன் பக்கத்தில் ரஞ்சிதாவின் போட்டோ, “நித்யானந்தா மாயி சுவாமி” என்ற தலைப்பில் உள்ளது. அதற்கு கீழே “கைலாசாவின் பிரதமர்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
நித்தியானந்தா விவகாரம் வெடித்தபோதே, ரஞ்சிதாவின் பெயரும் சேர்ந்தே வெடித்தது. நித்தியானந்தா நாடுவிட்டு நாடு ஓட வேண்டிய சூழல் வந்தபோதும், அவரது சிஷ்யையான ரஞ்சிதாவும் ஓட வேண்டியதாயிற்று. அந்தவகையில், தொடர்ந்து தொடர்பிலேயே இருந்து வருவதாக தெரிகிறது. நித்தியானந்தா நடத்தும் நிகழ்வுகளில் ரஞ்சிதா பங்கேற்று, அந்த வீடியோக்கள், போட்டோக்களும் இணையத்தில் அடிக்கடி வெளியாகிய வண்ணம் இருந்தன. தொடர்ந்து சிஷ்யையாக இடம்பிடித்து வரும் நிலையில், பிரதமர் பட்டத்தை ரஞ்சிதாவுக்கு தந்திருக்கலாமோ? என்றும் இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த செய்திதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.